வெகுண்டு சென்றேன் அல்லிக்கேணி கருவறையுள் என் கனவில்
மகிழ்ந்தே சிரித்து எனை அணைத்து எந்தன் முதுகு தட்டி
கோபம் தணித்தே தன் அன்பால் என்னை குழந்தை ஆக்கி
மகிழச் செய்தான் மனங் கவர்ந்தான் பதில் சொல்லவில்லை
பெண்கள் பலரும் பாலியல் கொடுமைகள் அனுபவிக்க
பாஞ்சாலிக்கு ஆடை தந்தாய் பலரும் போற்ற
திரௌபதி மானம் காத்தவன் என பெயரும் வாங்கி
பின் வந்த பெண்களை கைவிடுவதேன் காக்கும் மாயா?
இன்ப துன்பங்கள் முன்னம் தான் படைத்தான் அவனே
துன்பங்கள் குறைத்திட வழிவகைகள் சொல்லி வைத்தான்
இரண்டுக்கும் விதைகள் நம்முள் அவன் போட்டும் வைத்தான்
நாம் வளர்ப்பது எதுவோ அதுவும் வளர்ந்திடும் வாழ்வில்
நம்முள் உள்ள நன்மை என்பது இன்பம் சேர்க்கும்
நம்முள் உள்ள தீமை என்பது துன்பம் சேர்க்கும்
அதுவும் இன்றி சக்திகள் உண்டு நம்மை செலுத்த
நல்லொழுக்கத்தால் நற்சக்திகள் வளரும் நம்முள்
நன்மை நம்முள் வளர்ந்திட நாம் முயல வேண்டும்
செய்வது யாதென தெளிந்து நாம் செயல் பட வேண்டும்
இதைத் தான் வள்ளுவனும் தெய்வத்தால் ஆகாதென்று ம்
முயற்சிக் கூலி தரும் என்றும் சொன்னான் தன் குறளில்
பின் எதற்கு தெய்வம் தொழல் என்பார் சிலர்
நன்மை நம்முள் வளர்ந்திட தானே தெய்வம் தொழல்
மனமது அடங்க அறிவது தெளிய நற்பாதை தெரியும்
அன்றி நாம் ஆவோம் கண்ணிருந்தும் குருடராக
இதையே தான் வள்ளுவனும் தன் குறளில்
கற்றதனால் பயனென்னென்றான் இறை தொழாமல்
ஆகையினால் இறையைப் பற்றி இன்பம் சேர்ப்போம்
இல்லையெனில் துன்பச் சேற்றில் இடறி வீழ்வோம்
துன்பத்தில் விழுந்தாலும் பிழையொன்றில்லை
மீண்டிடலாம் அதுவும் ஓர் அனுபவம் தான்
எத்தகைய நிலையில் நின்றும் இறையைப் பற்ற
அத்தகைய நிலைக்கும் மேல் உயர்வோம் நாமே
காயங்கள் அத்தனையும் ஆற்றி வைப்பான்
மாயங்கள் பலவற்றை நிகழ்த்த வல்லான்
நம் வாழ்வை நல்வாழ்வாய் மாற்ற வல்லான்
இத்தனை விளக்கங்களும் சொன்னான் இல்லை
என்றாலும் எனை அணைத்தென் கோபம் தீர்த்தான்
கோபம் தணிந்ததில் குளிர்ந்த படிகமாய் மனம் தெளிய
ஞானம் மலர்ந்தது பதிலும் கிடைத்தது அவன் அருளால்
2 comments:
அருமை
nandri
Post a Comment