எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள்
உனக்காய் இங்கே தவம் கிடந்தேன்
என் எலும்பும் தோளும் உடலும் தேய
என் உயிரை மட்டும் வைத்திருந்தேன்
நீ வருகின்ற வழியை பார்த்து பார்த்து
என் நீள விழியும் பூத்ததய்யா
எங்கே ராமன்? என கேட்டு கேட்டு
என் இதயம் தினமும் துடித்ததய்யா
உணவும் மறந்தேன் நீரும் மறந்தேன்
பஞ்சனை தூக்கம் நான் துறந்தேன்
நீ வருவாய் என்ற ஆசையில் மட்டும்
இதுவரை நானும் பிழைத்திருந்தேன்
உனக்காய் நானும் கனிகள் சேர்க்க
வனத்துள் கொஞ்சம் திரிந்திடுவேன்
அந்த நேரத்தில் நீ வந்திருப்பாய் என
மீண்டும் இருப்பிடம் திரும்பிடுவேன்
தினமும் இப்படி ஏமாந்தும் கூட
உன் மேல் பாசம் மட்டும் வளர்ந்ததய்யா
என் வளர்பிறை பாசம் முழு மதியாகி
உன் முகத்தில் இன்று ஒளிருதய்யா
கண்டேன் கண்டேன் உன் திருமுகம் கண்டேன்
என் ஆயுளின் பயனை நான் அடைந்தேன்
ஆனந்தப் பெருநிலை திளைக்க திளைக்க
என் ஆன்மாவும் உச்சிக்கு ஏறுதய்யா
இனிக்கும் கனிகளை கொடுக்கும் எண்ணத்தில்
உன் விருந்தை எச்சில் செய்திட்டேன்
மறு வார்த்தையின்றி நீ உண்டு முடித்ததில்
இது வரை அது பற்றி மறந்திட்டேன்
இதுவரை காத்த ஆச்சாரம் அனைத்தும்
பாசமிகுதியால் அழித்திட்டேன்
விருந்து முடிந்த நிலையில் இப்போது
செய்வதறியாது விழித்திட்டேன்
என் தவிப்பை பார்த்து ராமா நீயும்
குழந்தை போல சிரிக்கின்றாய்
ஆச்சாரத்தில் நான் கொண்ட பிடிப்பை
அழகாய் நீயும் கரைக்கின்றாய்
அன்பே ராமா உனை கண்டது போதும்
என் உள்ளம் நிறைகுடம் ஆனதய்யா
மனித பிறவியின் உச்சத்தை தொட்டேன்
இனி மனித பிறவி போதுமய்யா
உன் பேரை நானும் ஜபித்துக் கொண்டே
அக்கினி ஜ்வாலையில் இறங்கிடுவேன்
ஆத்ம ஸ்வரூபனை கண்ட மகிழ்ச்சியில்
ஆத்ம ஸ்வரூபம் பெற்றிடுவேன்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
ராம ராம ராம ராம ராம ராம ராம்
6 comments:
சிறந்த பக்தையின் உன்னதமான பக்தியை சொல்லும் அழகான பாடல்..
//கண்டேன் கண்டேன் உன் திருமுகம் கண்டேன்//
ஸ்ரீராமரின் திவ்விய திருமுகம் கண்ட கண்களுக்கு வேறென்ன வேண்டும்.?
நன்றி திலகா. ஸ்ரீ ராம ஜெயம்.
The picture is so beautiful and I am sure the poem is beautiful too.
Thank you Venus... :)
சபரியின் மனநிலையை அழகாய் சித்தரித்திருக்கிறீர்கள் ரமேஷ்.
ஸ்ரீ ராம ஜெயம்.
நன்றி கவிநயா...
ஸ்ரீ ராம ஜெயம்
Post a Comment