கால்கள் என்ன கால்கள் இவை இராமபிரான் கால்கள்
கல்லை கூட பெண்ணாக கனியவைத்த கால்கள்
கண்ணியவான் ராமரையே தாங்கி நிற்கும் கால்கள்
புண்ணியவான் ஆஞ்சநேயர் போற்றி நிற்கும் கால்கள்
பண்ணிய பல பாவமெல்லாம் தீர்த்து வைக்கும் கால்கள்
எண்ணிய நல்லெண்ணமெல்லாம் ஈடேற்றும் கால்கள்
மிதிலை மாநகரினுள்ளே புகுந்து சென்ற கால்கள்
மிதிலை நகர் மைதிலியும் பிடித்து விடும் கால்கள்
பரதனுக்கு தன் சுகத்தை தானம் தந்த கால்கள்
பாரதத்தின் எல்லை வரை நடந்து சென்ற கால்கள்
விராதனுக்கு மோட்சம் என்னும் வானம் தந்த கால்கள்
மலைமேடு பல காடு பல கடந்து சென்ற கால்கள்
வன்மையுள்ள தாமரையாய் மலர்ந்து நிற்கும் கால்கள்
தண்மையுள்ள சூரியனாய் ஒளிர்ந்து நிற்கும் கால்கள்
தன்மையுள்ள மனிதரெல்லாம் தலை வணங்கும் கால்கள்
இன்மையெனும் இம்சையினை இழக்கச் செய்யும் கால்கள்
மறுமை தரும் மாதவத்தை மலரச் செய்யும் கால்கள்
மண்ணுலகில் இறங்கி வந்த விண்ணுலகக் கால்கள்
படுக்கும் பொழுது தலையணையை இக்கால்களாய் நினைக்கிறேன்
ராமநாமம் ஜபித்துக் கொண்டு முத்தத்தால் நனைக்கிறேன்
ராமபிரான் தூங்கும்போதென் மடிமீது வைக்கிறேன்
பொக்கிஷமாய் கருதியதை மெல்ல மெல்ல பிடிக்கிறேன்
நெஞ்சத்தின் வஞ்சம் தீர நெஞ்சோடு அணைக்கிறேன்
தலைகனத்தை குறைத்திடவே தலையின் மீது வைக்கிறேன்
ஸ்படிகமென தெளிந்த நீரால் அபிஷேகம் செய்கிறேன்
ஜவ்வாது சந்தனத்தை கால் ஆடையென நெய்கிறேன்
மல்லிகை பூவிதழ்கள் மழையாகச் சொரிகிறேன்
மானச பூஜையொன்று மனதுக்குள் புரிகிறேன்
என் நல்வினையின் பயனென்று மனதுக்குள் மகிழ்கிறேன்
மனது வைத்த மன்னவரை நெஞ்சுக்குள் நெகிழ்கிறேன்
கால்கள் என்ன கால்கள் இவை இராமபிரான் கால்கள்
கல்லை கூட பெண்ணாக கனியவைத்த கால்கள்
கண்ணியவான் ராமரையே தாங்கி நிற்கும் கால்கள்
புண்ணியவான் ஆஞ்சநேயர் போற்றி நிற்கும் கால்கள்
2 comments:
ஸ்ரீ ராமருக்கு பாத பூஜை செய்வதாய் ஒர் பக்தரின் எண்ணங்களை சொல்லும் வரிகள் அனைத்தும் அருமை..
பாடலுக்கு பொருத்தமாய் ராமர், சீதை ஒவியமும் அற்புதமாக இருக்கிறது..
நன்றி சகோதரி. :)
Post a Comment