ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
என்பது எனக்கு எப்பொழுதுமே மிக பிடித்த ராம நாம ஜபம்.
அதே போல ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய இவ்விருவருக்கும் அடுத்தபடியாக எனக்கு மிக பிடித்தமான இருவர் மஹாத்மா காந்தி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவர்.
ரகுபதி ராகவ ராஜா ராம் என ஜபிக்கும் பொழுது ஸ்ரீராமரின் அறிவு, வீரம், சத்தியம், ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆற்றல், புத்திக்கூர்மை, வைராக்யம், உறுதி, வலிமை ஆகிய பண்புகள் என் உள்ளத்தை நிறைக்கும்.
பதித பாவன சீதா ராம் என ஜபிக்கும் பொழுது ஸ்ரீராமரின் கருணை, மென்மை, பணிவு, விட்டுக்கொடுக்கும் மனம், வள்ளல் குணம், பாசம், அடக்கம், அக்கறை, தாயுள்ளம், இரக்கம், தன்னலமற்ற சிந்தனை ஆகிய அருங்குணங்கள் என் உள்ளத்தை கரைக்கும்.
ஆக ரகுபதி ராகவ ராஜா ராமர் என் மூளைக்கு உத்வேகம் அளிப்பவராகவும் பதித பாவன சீதா ராமர் என் இதயத்தை இளக செய்பவராகவும் எப்பொழுதும் இருந்திருக்கிறார்.
ராஜா ராமரும் மஹாத்மா காந்தியும்:
---------------------------------------------------
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் ராஜாராமர் என் மூளைக்கு எந்த உத்வேகத்தை அளித்தாரோ அதே உத்வேகத்தை அதே பாணியில் என் மூளைக்கு மஹாத்மா காந்தியும் அளித்தார்.
உதாரணத்திற்கு ஸ்ரீராமர் சத்தியத்தின் மீது கொண்டிருந்த பிடிப்பு. அதே பிடிப்பு மஹாத்மா காந்தியும் சத்தியத்தின் மீது கொண்டிருந்தார். இது என் அறிவிற்கு மிகுந்த தெளிவை ஏற்படுத்தியது.
இதே போல அஹிம்சை. மஹாத்மா காந்தியாவது எதிரியின் கையில் வலிமையான ஆயுதங்கள் இருக்க நம்மிடம் அவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இல்லாத நிலையில் அஹிம்சையை கைக் கொண்டிருந்தார். ஆனால் ஸ்ரீராமரோ தன் கையில் ஆயுதம் இருந்த நிலையிலும் கூட, தன் எதிரி தனக்கு முன்பாக நிராயுதபாணியாக நின்றிருந்த நிலையிலும் கூட அஹிம்சையை கடைப்பிடித்தார்.
இந்த இடத்தில் ஸ்ரீராமர் கொன்ற அரக்கர்கள் பற்றி கேள்வி எழும். ஸ்ரீராமர் செய்த வதங்கள் யாவும் வதையுண்டவர்கள் அதற்கு பிறகு தர்மத்திற்கு எவ்வகையிலும் உதவ மாட்டார்கள் என்கிற நிலையிலேயே நிகழ்ந்தன. அதுவும் அவர்களிடம் அன்பும் நல்வார்த்தைகளும் இனி எடுபடாது என்கிற நிலையிலேயே நிகழ்ந்தன.
இது எனக்கு அஹிம்சையின் நுட்பங்களை புரிந்து கொள்ள உதவியது. உதாரணத்திற்கு நான் இரவில் தனியான சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது என் கழுத்தில் ஒருவன் கத்தி வைக்கிறான் என்றால், அங்கே அஹிம்சை என்பதை நான் கைக் கொள்ள முடியாது.
ஸ்ரீராமரிடம் வீரத்திற்கும் முரட்டுத்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கற்றேன் என்றால் மஹாத்மா காந்தியிடம் அஹிம்சைக்கும் பலவீனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நான் கற்றேன்.
சீதா ராமரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும்:
------------------------------------------------------------
சீதா ராமர் என்பது ஸ்ரீராமருடைய மென்மையான குணங்களை குறிக்கும். பதித பாவன சீதா ராம் என ஜபிக்கும் பொழுது இதயம் இளகும். ஸ்ரீராமரிடம் நம் இதயத்தை இளகச் செய்யும் பண்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
ஸ்ரீராமர் பிறந்தவுடன் அவர் செய்த முதல் காரியமே அழுதது தான். அந்த அழுகை சாதாரண அழுகை கிடையாது. அது சர்வ உலகங்களையும் ஆளூம் இறைவன் இந்த மண்ணில் மனிதனாக பிறந்து சக மனிதர்களிடம், 'நானும் உங்களைப் போன்றவனே, என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று விண்ணப்பித்த அழுகையாகும். இது தான் ஸ்ரீராமர். உதவும் பொழுது கூட பணிந்து உதவும் குணம். கேட்கட்டும் கொடுக்கலாம் என காத்திராமல் தேவையறிந்து வாரி வழங்கும் தன்மை. ஒருவனை புண்படுத்திவிட்டால் அவன் நம்மிடம் வந்து உதவி கேட்க விரும்ப மாட்டானே என்கிற அக்கறை. ஒருவனை வெல்வதென்பது அவனைவிட சிறப்பானவனாக இருப்பதிலில்லை அவன் இதயத்தில் இடம்பிடிப்பதே என்கிற கொள்கை.
ஸ்ரீராமர் செய்யும் ஒவ்வொரு காரியமுமே நம் இதயத்தை இளக செய்வதாகவே இருக்கும். எப்படி சந்திரனை பார்த்தால் நம் கண்களும் மனமும் குளிர்கின்றனவோ அதே போல ஸ்ரீராமச்சந்திர பிரபுவை நினைத்தாலே நம் இதயம் குளிர்ந்து விடும்.
தான் தாக்கப்படுவதை பற்றி கூட கவலைப் படாமல் தாடகை ஒரு பெண் என்பதற்காக அவளை தாக்க தயங்கி நின்றதாகட்டும், தனக்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட தன் தந்தைக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தாமல் வனம் செல்ல முடிவு செய்ததாகட்டும், அன்னை சீதை உடன் வருவதாக சொன்ன பொழுது அதை மறுத்து சொன்ன வார்த்தைகளில் ஆகட்டும், பின்னர் அன்னை சீதையை உடன் வர சம்மதித்த அந்த வாத்சல்யத்தில் ஆகட்டும்... ஸ்ரீராமர் செய்த ஒவ்வொரு செயலும் நம் இதயத்தை இளகச் செய்யும் செயல்களே......ஸ்ரீராமரிடம் ராஜா ராமரை விட சீதா ராமரையே நாம் அதிக அளவில் தரிசிக்க முடியும்......
சீதா ராமரிடம் இருக்கும் இத்தகைய மென்மையான பண்புகள் அனைத்தையுமே நான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கண்டேன். எப்பொழுதெல்லாம் ராமகிருஷ்ண மடம் சென்று அவர் திருவுரு முன்பாக அமர்கிறேனோ எப்பொழுதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளை படிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் சீதா ராமரை நினைக்கும் பொழுதெல்லாம் என் இதயம் எப்படி இளகுமோ அப்படி ஸ்ரீராமகிருஷ்ணரை நினைத்தும் என் இதயம் இளகும். அப்பொழுதே என்னால் இவ்விருவருமே ஒன்றே போன்ற சக்திகள் தான் என்பதை என்னால் உணர முடிந்தது.
ஸ்ரீராமரின் அறிவு தான் மகாத்மா காந்தியாகவும் ஸ்ரீராமரின் அன்பு தான் ராமகிருஷ்ண பரமஹம்சராகவும் பிறந்து விட்டதோ என நினைத்திருக்கிறேன்.
இதையெல்லாம் உணர்ந்ததாலேயே 2008-ல் இவ்வலைதளம் துவங்கிய பொழுது... ஸ்ரீகிருஷ்ணரின் சிஷ்யன், ஸ்ரீ ராமரின் பக்தன், மஹாத்மா காந்தியின் ரசிகன் சுவாமி ராமகிருஷ்ணரின் பிள்ளை என பதிவு செய்தேன். ஏனென்றால் இந்நால்வரை நினைக்கும் பொழுதும் என் இதயத்தின் உணர்வுகள் ஒன்றே. என் உடம்பில் நிகழும் சக்திநிலை மாற்றங்களும் ஒன்றே.
பரசுராமரின் மறு அவதராங்கள்:
--------------------------------------------
பிறகு அந்த எண்ணங்களை விட்டு ஸ்ரீராமரை வழிபடுவதில் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். இப்படியிருக்கையில் கடந்த இரண்டு வாரங்களாக எனக்கு ஒரு புதிய தெளிவு ஏற்பட்டுள்ளது. அது யாதெனின்:
பரசுராமரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சராகவும் மகாத்மா காந்தியாகவும் அவதாரம் செய்திருக்கிறார்.
இப்படி நான் சொல்வதற்கான காரணங்கள்:
1.பரசுராமர் அடிப்படையில் ஓர் அந்தணர். பின் சத்ரியராக மாறியவர். ஆக அவருக்குள் இருவேறு வினைகள் இருந்திருக்கின்றது. இந்த இருவினைகளுமே எதிரெதிர் தன்மையுடைய வினைகள். ஒருவினை சத்துவ குணத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய வினை. மற்றொன்று ரஜோ குணத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய வினை. இங்கேயே இரண்டு பிறப்புகளுக்கான விதை இருக்கிறது.
2.இப்படி இருக்கும் பொழுது அவருக்கு இப்படியும் அல்லாமல் அப்படியும் அல்லாமல் போனதில் வருத்தங்கள் இருந்திருக்கும். இது இயற்கையே. அதனாலும் அவருக்கு மறுபிறவி எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை நாம் உணரலாம்.
3. பரசுராமர் ஸ்ரீராமரை சந்தித்த பொழுது ஸ்ரீராமரை போன்ற வீரனாக நாம் இல்லாமல் போய் விட்டோமே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்திருக்கும். அது ஸ்ரீராமரிடம் தோற்றுவிட்டதால் ஏற்பட்ட வருத்தமல்ல...ஸ்ரீராமரை போல கோபம் கொள்ளாமல், எதிரியை வெறுக்காமல், பெருமித உணர்வின்றி ஆயுதத்தை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும் அந்த தன்மை. இந்த குணத்தைத் தான் ஸ்ரீராமரின் வீரத்திற்கே அழகு சேர்க்க கூடிய குணமாகவும் ஸ்ரீராமரருடைய தனித்தன்மையாகவும் அறிஞர்களும் ஞானிகளும் போற்றுகிறார்கள்.
இந்த குணத்தை கண்டுவிட்டு தான் பரசுராமர் ஸ்ரீராமரிடம் பணிகிறார். விடைபெறுகிறார். ஆனால் அவரால் ஸ்ரீராமரை மறக்க முடியவில்லை. வீரம் என்கிற துறையில் இவர் செய்யாத சாதனைகள் இல்லை. தனக்கு நிகராக இன்னொரு வீரன் இல்லை என்கிற பெருமிதத்தோடு இந்த பூமியையே பல முறை வலம் வந்தவர். அசகாய சூரனாகவே எல்லா யுத்தங்களையும் வென்றவர். அப்படிப் பட்ட பரசுராமர் ஸ்ரீராமரிடம் கண்டு வியந்தது ஆயுதம் ஏந்தும் பொழுதும் துளி வெறுப்பின்றி பதட்டமின்றி கர்வமின்றி ஒரு சவரத் தொழிலாளி சவரக்கத்தியை பிடிப்பது போல ஸ்ரீராமர் வில்லை ஏந்தி நின்ற அந்த நிலை தான்.
அப்படி ஸ்ரீராமர் நின்ற அத்திருக்கோலமே பரசுராமருக்கு பாடமாக படமாகவும் அவர் உள்ளத்தில் பதிந்து விட்டது. அவர் ராஜாராமரின் வீரத்தையும் அறிவையும் சீதாராமரின் கனிவையும் பணிவையும் தியானித்தவண்ணம் அதன் பிறகு வாழ்ந்திருக்கிறார்.
பரசுராமர் ராமகிருஷ்ணராகவும் காந்தி மகானாகவும் அவதரித்தல்:
---------------------------------------------------------------------------------------------
பரசுராமர் தன் அந்தண வினைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ராமகிருஷ்ணராகவும் சத்ரிய வினைகளை நிறைவேற்றிக் கொள்ள காந்தி மகானாகவும் இரட்டை அவதாரங்கள் எடுக்கிறார்.
அவருடைய அந்தண வினைகள் ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்தது. அவருடைய அந்தண கடமைகளுக்கு துணை நிற்பதற்காக சரஸ்வதியின் அம்சமாக அன்னை சாரதா தேவி உடன் வருகிறார். ஏன் சரஸ்வதி தேவியின் அம்சமாக அன்னை சாரதை வர வேண்டும் எனின் அந்தணர் என்பவர் பிரம்மாவின் அம்சம். அவருக்கு துணையாக சரஸ்வதியின் அம்சமானவர் வருகிறார்.
அவருடைய சத்ரிய வினைகள் மகாத்மா காந்தியாக அவதரித்தது. வீரத்தின் அம்சமாக மகாத்மா காந்தி பிறந்ததாலேயே கஸ்தூரி பாய் அவருக்கு துணையாக வருகிறார். யுத்தத்திற்கு செல்லும் வீரர்களுக்கு தான் கஸ்தூரி திலகத்தை இடுவார்கள். ஆக வீரமே மகாத்மா காந்தியாக அவதரித்தது என்றும் அவருக்கு துணையாக வெற்றியே கஸ்தூரி பாயாக பிறந்ததென்றும் நாம் உணரலாம்.
மகாத்மா காந்திக்கும் ராமகிருஷ்ணருக்கும் உள்ள ஒற்றுமைகள்:
-------------------------------------------------------------------------------------------
1. உடலமைப்பு:
----------------------
இருவரின் உடலமைப்பே இவ்விருவருக்கும் இருக்கும் மிகப் பெரிய ஒற்றுமையாகும். இருவருமே மிகக் குறைவாக உண்ண கூடியவர்கள். அப்படியிருந்தும் இருவருமே மிகுந்த வலிமையுடைவர்களாக திகழ்ந்தார்கள்.
2.போதனைகள்:
-----------------------
இருவருடைய போதனைகளுமே ஒன்று தான். அவை
*அனைத்து மதங்களும் நல்ல மதங்களே என்பது.
*இன மொழி மத ஜாதி வண்ண தேச பேதமின்றி அனைவரும் இறைவனின் குழந்தைகளே என்பது.
*இருவருமே அஹிம்சாவாதிகள்.
3. ராமபக்தி:
-----------------
இருவருக்குமே 'ரகுபதி ராகவ ராஜாராம்! பதித பாவன சீதா ராம்!!' என்ற வாசகத்தில் இருக்கும் நாட்டம்.
மகாத்மா காந்தியடிகளின் ராமபக்தி:
-------------------------------------------------
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்
ஈஸ்வர் அல்லாஹ் தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்
என்பது மகாத்மா காந்தி அவர்களுடன் இரண்டற கலந்து விட்ட வரிகளாகும். பென் கிங்க்ஸ்லீ ஆஸ்கார் வாங்கிய பொழுது ஆஸ்கார் மேடையில் இந்த வரிகளுக்கான இசை ஒலித்தது. ரிச்சர்ட் அட்டென்பரோ எம்மி விருது வென்ற பொழுதும் பின்னணியில் இவ்வரிகளுக்கான இசையே ஒலித்தது. இப்படியாக ராமநாமத்தை அயல் நாட்டு மேடைகளில் எல்லாம் ஒலிக்க செய்த மகான், ஸ்ரீராமபக்தர், ஆஞ்சநேயருக்கு பிறகு ஸ்ரீராமருக்கு புகழ் சேர்த்துக் கொண்டிருக்கும் ராமதாசர் அண்ணல் காந்தியடிகள் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த தருணத்தில் அவர் பாதங்களை போற்றி வணங்குகிறேன்.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் ராமபக்தி:
--------------------------------------------------------
ராமகிருஷ்ண மடங்களில் ஏகாதசி தோறும் மாலையில் ஸ்ரீராமர் படத்தை வைத்து ராம நாம சங்கீர்த்தனம் செய்கிறார்கள். அதில் கடைசியாக வரும் இரு வரிகள் 'ரகுபதி ராகவ ராஜா ராம்! பதித பாவன சீதா ராம்!' என்பது தான்.
இதில் என்ன விசேஷம் என்றால்...ஏகாதசி அன்று எந்த பெருமாள் படத்தை வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம். தசாவதாரங்கள் இருக்க அங்கே ராமர் படத்தை தான் வைக்கிறார்கள். :)
ராமருக்கும் எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன... ஆனால் 'ரகுபதி ராகவ ராஜா ராம்! பதித பாவன சீதா ராம்!' என முடியும் அந்த பாடலை தான் அங்கே பாடுகிறார்கள்.
இதிலிருந்து அவ்விருவரின் ஆன்மாவும் ஒரே குரலில் ஒலித்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
4. இனிப்புப் பிரியம்:
---------------------------
இருவருக்குமே இனிப்பு வகைகளில் நாட்டம் இருந்திருக்கிறது. இருவர் வாழ்க்கையிலுமே அதிகம் சக்கரை தின்னும் சிறுவனுக்கு அறிவுரைக்கும் படி அச்சிறுவனின் தாயார் அவனை அழைத்து வர....அதற்கு இவ்விருவருமே சில நாட்கள் கழித்து வரும்படி கூறியதாகவும், காரணம் கேட்டதற்கு தத்தம் இனிப்புண்ணும் பழக்கத்தை தாங்கள் குறைத்துக் கொண்ட பின்னரே அவர்கள் அறிவுரை கூற இயலும் என்று கூறியதாகவும் கதை உள்ளது. இதைப் பற்றி நான் கூகுளில் தேடிய பொழுது, அதெப்படி இருவர் வாழ்க்கையிலும் அதே சம்பவம் நடக்கும்? யாரோ ஒருவருடைய நேசர்கள் பொய் சொல்லி விட்டார்கள், கதை திருடி விட்டார்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
காந்தியவாதிகளும் சரி ஸ்ரீராமகிருஷ்ண சிஷ்யர்களும் சரி இவ்விருவருக்குமே பொய் சொல்லி தத்தம் தலைவர்களின் புகழை பரப்ப வேண்டிய அவசியம் கிடையாது. அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களும் அவ்விரு மகாங்களின் வழியில் வந்தவர்களுக்கு வராது. தத்தம் செயல்களாலேயே தனிப்புகழுடன் விளங்கும் இவ்விருவரின் புகழையும் பரப்ப நினைப்பவர்கள் எதற்காக ஒரு பொய்யான கதையை சொல்லி இவர்கள் புகழை பரப்ப வேண்டும்?
ஆகையால் இந்தக் கதை இருவரின் வாழ்க்கையிலுமே நடந்தது உண்மையே என நாம் முடிவு செய்து கொள்ளலாம்.
அவ்விருவரும் ஒரே நபருடைய இருவேறு பிம்பங்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இப்பொழுது பரசுராமர் அதிக இனிப்பு வகை உண்ணும் பழக்கமுள்ளவரா என்கிற கேள்வி எழுகிறது?
அதற்கும் நிச்சயமாக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. பரசுராமரோ மகா கோபக்காரர். அதனால் அவரிடம் நெருங்க துணிந்த சக முனிவர்கள் யாரேனும் 'எப்பொழுதும் உர்ரென்று இராதீர்...கொஞ்சம் இனிப்பு வகைகளை வாயில் போட்டுக் கொள்ளும் அப்பொழுது தான் உங்களால் ஸ்ரீராமரை போல இனிமையானவராக மாற முடியும்' என கூறியிருக்கலாம். அதை பரசுராமரும் சிரத்தையுடன் பின்பற்றியிருக்கலாம். கொஞ்சம் நகைச்சுவையுடன் கூறினாலும் நான் சொல்லும் கருத்து விளையாட்டானதல்ல. இனிப்பு வகைகளை நாம் உண்ணும் பொழுது நாமும் இனிமையானவர்கள் ஆகிறோம் என்பது உண்மையே. இதை எவரும் அனுபவபூர்வமாகவே தெரிந்து கொள்ளலாம். அதை பரசுராமர் தன் கோபத்தை குறைத்துக் கொள்ள பயன்படுத்தியிருப்பார் என்பது என் கருத்து.
5.ராமகிருஷ்ணரின் தவமும் காந்தியின் யுத்தமும்:
----------------------------------------------------------------------
ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி பக்தர். அவர் சிறுவயது முதல் காளி கோவிலில் பூசாரியாக இருந்தவர். காளி தரிசனம் பெற்றவர்.முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காளி மாதாவை உபாசனைகளாலும் பூஜைகளாலும் வழிப்பட்டவர். மேலும் அவர் கடுமையான பல விரதங்களை மேற்கொண்டவர். அவர் கோதுமை உண்பதை கூட முற்றிலுமாக தவிர்த்தவர். அவர் உணவெடுத்துக் கொண்டாலும் அதிக பட்சம் ஒரு வாய் அல்லது இரண்டு வாய் உணவுதான். இப்படியெல்லாம் அவர் கடினமாக தவம் செய்தார். அவர் வழிபடாத தெய்வம் என்று யாரும் கிடையாது.
இவ்வளவு கடுமையான தவம் செய்தவர் உலகளாவிய சாதனைகள் எதுவும் செய்யவில்லை.விவேகானந்தரை உருவாக்கித் தந்தது, இன்னும் அவர் போல பல ஞானிகளை உருவாக்கித் தந்தது, அமுத மொழிகள் போன்ற புத்தகங்கள் தந்தது, கல்பவிருக்ஷமாக இருந்து அருள்பாலித்தது, இவையெல்லாம் சாதனைகள் தான் என்றாலும் அவர் செய்த அளப்பரிய தவத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இவை மிக சிறிய சாதனைகளாகவே எனக்கு படுகின்றன.
மறுபுறம் மகாத்மா காந்தி அவர்களை பார்க்கும் பொழுது அவர் தவம் என்று எதுவுமே செய்யவில்லை. அவர் ராம நாமம் ஜெபித்தார் என்றாலும் அவர் செய்த சாதனைக்கு அது மிக சிறிய தவமே.
இப்பொழுது நாம் ராமகிருஷ்ணரின் தவத்தையும் மகாத்மா காந்தியின் சாதனையையும் இணைத்துப் பார்த்தால் தான் அந்த தவத்திற்கு ஏற்ற வெற்றி இதுவென்பதையும் இந்த வெற்றிக்கு ஏற்ற தவம் அதுவென்பதையும் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியும்.
மகாத்மா காந்தி அவர்களுக்கு 17 வயது ஆகியிருந்த பொழுது ராமகிருஷ்ணர் தன் தவ வாழ்வை நிறைவு செய்தார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கையில் ராமகிருஷ்ணரே தன் தவ வலிமையை மகாத்மா காந்தி அவர்களுக்கு கொடுத்து மகாத்மா காந்தி அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மகாத்மா காந்தியின் வெற்றியும் அத்தகையதாகவே இருக்கிறது. இவர் ஒருவருடைய தைரியம் ஒரு நாட்டையே பற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு வெகு நிச்சயமாக ராமகிருஷ்ணருடைய தவ வலிமைக்கு இணையான தவ வலிமை தேவை. மேலும் அன்னை காளியே தைரியத்தை தரும் கடவுளாகவும் இருக்கிறார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தக் காரணங்களால் தவத்திரு ராமகிருஷ்ணரின் தவமும் மாவீரர் மகாத்மா காந்தியின் வீரமுமே நம் இந்திய திருநாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தன என உறுதியாக கூற முடியும்.
6.மகாத்மா காந்தியின் இரு-கைப் பழக்கம்:
--------------------------------------------------------
பரசுராமரே மகாத்மா காந்தி என நான் நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் மகாத்மா காந்தியின் இருகை பழக்கம். அவர் இரு கைகளையும் ஒன்றே போல பயன்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார். இது மனிதர்களிடம் மிக மிக அரிதாக காணப்படும் ஒரு திறமையாகும்.
மகாத்மா காந்தி பரசுராமரின் அவதாரம் இல்லை என வைத்துக் கொண்டு சிந்தித்தால் மகாத்மா காந்தியின் இருகைப் பழக்கத்தை எண்ணி வியக்கலாம் அவ்வளவே.
மாறாக அவரை பரசுராமரின் அவதாரம் எனக் கருதினால் அவர் பரசுராமராக இருந்த பொழுது ஆயுதப் பயிற்சியிலேயே இத்திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது நமக்குப் புரியும். ஏனென்றால் பரசுராமர் போன்ற வீரர்கள் ஒரே சமயத்தில் இரு கைகளையும் வெவ்வேறு இயக்கங்களுக்கு உட்படுத்தும் அளவிற்கு பயிற்சி செய்து வைத்திருப்பார்கள். எந்த ஒரு ஆயுதத்தையும் இரு கைகளிலும் சம லாவகத்தோடு பயன்படுத்துவது, ஒரே சமயத்தில் இரு வகையான ஆயுதங்களை இருவேறு சுழற்சிகளில் இரு கைகளிலும் பயன்படுத்துவது, ஒரு கையிலேயே உள்ளங்கையில் ஒரு பெரிய ஆயுதத்தையும் விரல்களுக்கு நடுவில் குட்டி ஆயுதங்களையும் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை திறம்பட செய்திருப்பார்கள்.
இந்த பயிற்சிகளையெல்லாம் அண்ணல் காந்தியடிகள் தாம் பரசுராமராக இருந்த பொழுது திறம்பட செய்து பழகியிருந்ததனாலேயே பிற்பிறவியில் இருகை லாவகம் கொண்டவராக திகழ்ந்தார்.
இது போல பகவான் ராமகிருஷ்ணரும் ஆயுதம் பிடிக்கும் முறை பற்றிய ஒரு சிறு உபதேசத்தை சுவாமி விவேகானந்தர் மூலமாக வழங்கியிருக்கிறார். ஒருவரிடம் கூர்மையான பொருட்களை கொடுக்கும் பொழுது கூரான முனையை நம் பக்கம் வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும். அதுவே பக்குவத்தின் அறிகுறி.
7.மகாத்மா காந்தியின் நுட்பமான வியூகம்:
-----------------------------------------------------------
மகாத்மா காந்தியின் வெற்றி வியூகம் என்பது இன்று வரையிலும் எவரும் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ஆசிரியர் ஒருவர் காந்தியவாதிகள் மேற்கொண்ட அஹிம்சை போராட்டத்தினால் எந்த பின்விளைவும் இல்லை. ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால் இன்று வரை கூட நம்மை ஆண்டிருக்கலாம் என கூறினார்.
ஆக வரலாற்று புத்தகங்களிலேயே இவ்வுண்மை பதிவாக வில்லை என்பது நன்றாக தெரிகிறது.
அது மட்டுமில்லாமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதற்கான உண்மையான காரணங்கள் எங்குமே பேசப் படுவதில்லை.
உண்மையான காரணங்கள் தெரியாததனாலேயே பலரும் பல தவறான காரணங்களை கூறித் திரிகிறார்கள்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியதன் உண்மையான காரணம்:
----------------------------------------------------------------------------------------------------
மகாத்மா காந்தி ஒத்துழையாமை என்னும் ஆயுதத்தை கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இது அனைவரும் அறிந்ததே. இதனால் ஆங்கிலேயர்களுக்கு இரண்டு அடிகள் விழுந்தன.
*ஒன்று வருவாய்த் தடை என்பது.
*மற்றொன்று பண விரயம் என்பது.
வருவாய்த்தடை என்பது
* இந்தியர்கள் வரி செலுத்த மறுத்ததாலும்.
*ஆங்கிலேயர்கள் விற்ற பொருட்களை வாங்க மறுத்ததாலும் ஏற்பட்டது.
பண விரயம் என்பது
*அரசு ஊழியர்களுக்கான சம்பளம். அரசாங்க அமைப்பில் உச்சபட்ச பதவியில் இருந்து கடைநிலை ஊழியர் வரை அனைவருக்குமான சம்ளத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
*அரசாங்க அலுவலங்கள் இயங்குவதற்கு தேவையான இதர செலவுகள்.
*சிறையிலிருந்த காந்தியவாத போராளிகளுக்கு தேவையான மருத்துவ செலவுகள்.
*அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவுக்கான செலவுகள்.
இதனால் ஆங்கிலேயர்களுக்கு இந்தியா லாபகரமான நாடாக இல்லாமல் போய்விட்டது. அதனால் அவர்களும் வெட்கத்தை கக்கத்தில் வைத்தபடி காயத்தில் கைவைத்து மறைத்தபடி....நல்ல பிள்ளைகளாக நம் நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு விலகி சென்றார்கள். அண்ணல் காந்தியடிகளும் இது பற்றி விளக்கிச் சொல்லாமல் அவர்களுடைய கௌரவத்தைக் கூட காப்பாற்றிக் கொடுத்தார்.
ஆக இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு போனால் போகட்டும் என்று கொடுத்த ஒன்று அன்று. அது மகாத்மா காந்தி என்னும் மாவீரர் வன்முறையால் அவர்கள் தொண்டைக் குழாயை நசுக்காமல் மென்முறையால் அவர்கள் வருவாய்க் குழாயை நசுக்கிப் பிடித்து, அவர்களை திணறடித்து அவர்களை சுதந்திரம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரம். இப்படி ஒரு மதிநுட்பமான காய் நகர்த்தல் இதிகாச புராண வரலாற்று மற்றும் புனைவு கதைகளில் கூட காண கிடைக்காத காய் நகர்த்தலாகும்.
இதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களே காந்தி சுபாஷ் சந்திரபோஸை காட்டிக் கொடுத்து சுதந்திரம் வாங்கினார் என்று தங்கள் நாட்டின் வரலாற்றையே தன்மானமின்றி கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அஹிம்சை:
-----------------
இந்த போராட்டத்தில் அஹிம்சை என்பது மிகப் பெரிய பங்கு வகித்தது. அண்ணல் அஹிம்சையை போதித்தது மிக எளிமையான காரணத்திற்காகத் தான். நம்மவர்கள் ஆங்கில காவலர்களை தாக்க முற்பட்டால் ஆங்கில காவலர்களுக்கு நம்மவர்கள் மீது வன்முறையை உபயோகிக்க ஒரு காரணம் கிடைத்து விடும். அந்த காரணத்தை ஒரு போதும் அவர்களுக்கு நம்மவர்கள் கொடுத்து விடக் கூடாது என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். இப்பொழுது அவர்கள் வன்முறையை உபயோகித்தாலும் அது அவர்கள் மீதான குற்றமாகவே இருக்கும். இதனால் அவர்கள் நீதி மன்றங்களே அவர்கள் காவல் துறையை கண்டிக்க நேரிடும். இதனாலேயே அண்ணலின் அறப்போரை ஆயுதங்கள் பல இருந்தும் ஆங்கிலேயர்களால் ஒடுக்க முடியவில்லை.
இருநூறு ஆண்டுகளாக வியாபார நிறுவனமாக இருந்த பொழுதே பல்வேறு வீரர்களை ஆயுதப்போராட்டத்தில் சமாளித்து நின்ற ஆங்கிலேயர்களால் அரசாங்கமாக இருந்து கூட அண்ணலின் அகிம்சையை அசைக்கக் கூட முடியவில்லை. இது சாதாரண வெற்றியல்ல! இது இமாலய வெற்றி! வரலாற்றின் இதற்கு முன்பு எவரும் கண்டிராத வெற்றி.
அண்ணலின் உண்ணாவிரதங்கள்:
-----------------------------------------------
அண்ணலின் உண்ணாவிரதங்கள் யாவுமே தம் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் எல்லை மீறிய போது அதை தடுப்பதற்காக இருந்த உண்ணாவிரதங்களே அன்றி அவர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு உண்ணாவிரதமும் இருக்க வில்லை. ஒரே ஒரு முறை அவர் சிறையில் இருந்த உண்ணாவிரதம் கூட ஒத்துழையாமை என்கிற அடிப்படையிலேயே அணுகப்பட்ட உண்ணாவிரதமாகும். நம்மீது அன்பு கொண்டவர்களே நம் உண்ணாவிரதத்திற்கு இளகுவார்கள் என்பது அண்ணலுக்கு நன்றாக தெரியும் அதனாலேயே அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உண்ணாவிரதங்கள் இருக்கவில்லை. அவர் தம் படையை கட்டுக் கோப்பான ஒழுக்கத்தில் வைக்க உண்ணாவிரதங்களையும் ஆங்கிலேயர்களை வழிக்குக் கொண்டு வர உப்பு சத்தியாகிரகம் போன்ற நுட்பமான போராட்டங்களை பயன்படுத்தினார்.
அண்ணலின் போர்முறையின் சிறப்பம்சங்கள்:
-----------------------------------------------------------------
காந்திமகான் அவர்கள் போர் செய்ய ஆள் சேர்க்கிறேன், ஆள் சேர்க்க பணம் சேர்க்கிறேன், பணம் சேர்க்க நன்கொடை வேண்டும் உதவி வேண்டும் என்றெல்லாம் எங்கும் சென்று நிற்கவில்லை. அவர் இந்நாட்டின் பொது மக்களையே வீரர்களாக பயன்படுத்தினார்.
அவர் கையில் துப்பாக்கியும் வைத்துக் கொண்டு காட்டுக்குள்ளும் ஓடி ஒளிந்து திரிந்து வாழும் கோழையாக இருக்கவில்லை. சத்தியம் என்ற ஒன்றையே கவசமாக கொண்டு சாதூர்யம் என்ற ஒன்றையே ஆயுதமாக கொண்டு அன்பால் தன் பின்பால் திரண்ட கூட்டத்தையே படையாக கொண்டு ஆங்கிலையர்களை எதிர்த்து அதிர்ந்து கூட பேசாமல் வெற்றிக் கனியைப் பறித்தார்.
வெள்ளைக்காரன் ஊருக்குள் இருக்க இவர் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டு பதுங்கி பதுங்கி நாட்டுக்குள் திருடனை போல சுற்றவில்லை. எங்கே இருக்கிறோம் என்பதை கூட வெளி உலகுக்கு தெரிவிக்க துப்பற்றவராக தைரியமற்றவராக அவர் இருக்கவில்லை. தம் தொண்டர்களை தலைவர் எங்கிருக்கிறார், எந்த நாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார், எந்த குழிக்குள் குப்புற படுத்திருக்கிறார், எந்த குகைக்குள் இருந்துகொண்டு உறுமிக் கொண்டு இருக்கிறார் எப்பொழுது பாயப்போகிறார் என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கவில்லை. மாறாக வெள்ளைக்காரர்களை தன் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்று தலையை உடைத்துக் கொள்ள வைத்தார். வெள்ளைக்காரன் எந்த இடத்தில் நின்று அதிகாரம் செலுத்தினானோ அதே இடத்தில் அவன் ஆயுதங்களுக்கும் அடாவடிகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிராயுதபாணியாக காலூன்றி நின்று இது என் இடம் நீ வெளியேறு என்று கூறிய வீரம்....ஒரு சிங்கத்தின் வீரமே.....!
இந்த மண்ணில் தோன்றி ஆயுதம் ஏந்தி போராடிய எந்த வீரனையும் விட பல்லாயிர மடங்கு அண்ணல் காந்தியடிகள் ஒப்பற்ற வீரரே....... இதை புரிந்து கொள்ள தவறுபவர்கள் வீரம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களேயன்றி வேறில்லை......
அவர்கள் மக்கள் மத்தியில் வந்து நின்று முகம் காட்ட தைரியமில்லாமல் புதைகுழிகளில் பதுங்கி வாழும் கோழைகளையே வீரர்களென்று கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்....
தமிழ்நாட்டில் இருக்கும் சில தறுதலைகள் புரிந்து கொள்ள வேண்டியது:
----------------------------------------------------------------------------------------------------
*மஹாத்மா காந்தி தம் மக்களை காப்பதாக சொல்லி துப்பாக்கியை ஏந்தவுமில்லை அந்த துப்பாக்கியை தம் மக்களை நோக்கியே திருப்பவுமில்லை.
*மஹாத்மா காந்தி பெண்கள் இடுப்பில் குண்டை வைத்து அனுப்பிவிட்டு அவர்கள் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மாவீரனென்று மார்தட்டிக் கொள்ளவில்லை. அஹிம்சா வழிப் போராட்டத்தில் ஆப்ரிக்காவில் முதல் அடியை தாமே வாங்கி அப்போரட்டத்தை துவக்கி வைத்தார். கடைசி வரையிலும் தம் தொண்டர்கள் பட்ட எல்லா துயரங்களையும் தாமும் பட்டார். கடைசியாக மார்பில் மூன்று குண்டுகளை ஏற்று தாமே அந்த போராட்டத்தின் கடைசி அடியையும் ஏற்றுக் கொண்டார்.
*மஹாத்மா காந்தி பால் மணம் மறக்காத பாலகர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து அவர்களை முன்வரிசையில் நிற்க வைத்து விட்டு பாதாள பங்களாவில் பதுங்கும் புலி என்கிற பெயரில் பதுங்கிக் கொண்டிருக்கவில்லை.
*நான் இப்பொழுது பதுங்கும் புலியாக இருக்கிறேன் இதோ பாய்கிறேன் பார் அதோ பாய்கிறேன் பார் என கடைசி வரை பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கவில்லை. பாரதத்தின் தெருக்களிலும் ஆங்கிலேயர்களின் கோட்டைகளுக்கும் சகஜமாக மலை ஆடு போல துள்ளித் திரிந்து இருநூறாண்டு ஆங்கில சாம்ராஜ்யத்தை தன் மூளையால் முட்டி முட்டி தரை மட்டமாக்கினார்.
*பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட பதுங்கு குழியில் பதுங்கிக் கொண்டு தொலைக்காட்சியை பார்த்து நேரத்தை வீணாக்கிக் கொண்டு நன்றாக வேளா வேளை தின்று கொழுத்து பூசணிக்காய் போல காட்சி தரவுமில்லை. அவர் பின் நின்ற போராளிகளை காய்ந்த கருவாடு போல வைத்திருக்கவுமில்லை.
*மஹாத்மா காந்தி எந்த ஒரு பெண்ணையும் விதவையாக்கி அவள் கோபத்திற்கு ஆளாகவுமில்லை. அவள் ஆவேசம் கொண்டு பழிவாங்கக் கிளம்பிய பொழுது அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடவுமில்லை. வீரன் வீரன் என கைப்புள்ளை போல வெற்று வாய் சவடால் பேசி விட்டு ஒரு பெண்ணின் சாதூர்யத்தால் மிதிபட்டு மாயவுமில்லை.
* எல்லாவற்றுக்கும் மேலாக மஹாத்மா காந்தி தான் நடத்திய எல்லா போராட்டங்களிலும் தாமே முன் நின்று போராடினார். தாம் காப்பதாக சொன்ன மக்களையே மனிதக் கவசங்களாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் சித்திரவதைக்கு ஆளாகி சீரழிக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட போதும் கூட தன் உயிர் பெரிதென தன் உயிரை காத்துக் கொண்டு பதுங்கி பதுங்கி பதுங்குக் குழிக்குள்ளேயே உட்கார்ந்து தான் காப்பதாக சொன்ன இனத்தையும் அழித்து தன் குடும்பத்தையும் அழித்து கடைசியில் தானும் அழியவில்லை.
இதையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் சில கோமாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். வீணாக கோழைகளையும் முட்டாள்களையும் அயோக்கியர்களையும் தலைவெனென்று சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு மஹாத்மா காந்தியையும் கர்மவீரர் காமராஜரையும் ஸ்ரீராமரையும் தலைவர்களாக ஏற்றுக் கொண்டால் தான் இந்த நாட்டிற்கு நல்ல காலம் என்பது வரும்.
அதன் முதல் படியாக காக்கை எச்சமிட்டுருக்கும் மஹாத்மா காந்தி சிலைகளையும் காமராஜர் சிலைகளையும் இந்தக் கோமாளிகள் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் அந்த புனித நீரை தீர்த்தமென கருதி இவர்கள் பருக வேண்டும் அப்பொழுது தான் இவர்களுக்கு அஞ்ஞானம் என்பது நீங்கி நல்லறிவு பிறக்கும்.
நல்லதுக்கும் கெட்டதுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியும்.
கோழைக்கும் வீரனுக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியும்.
ஸ்ரீராமர் காந்தி மகானுக்கு செய்த கௌரவம்:
-------------------------------------------------------------
இந்த வீரத்தை அண்ணலுக்கு அவர் பரசுராமராக இருந்த பொழுது கற்றுத் தந்த ஸ்ரீராமரே ஆயுதம் ஏந்தாமல் போராடக் கூடிய இந்தக் களத்தை தன் பக்தரான காந்தியடிகளுக்கு விட்டுக் கொடுத்து, ஆயுதம் ஏந்தி போராடிய தன்னை விடவும் அயுதம் ஏந்தாமல் போராடிய தன் பக்தனே தன்னை விட உயர்ந்தவனென்று உலகுக்கு உயர்த்திக் காட்டிவிட்டார். இது முதல் கௌரவம்.
இரண்டாவது கௌரவம்:
-----------------------------------
இவ்வுலகம் இப்படியொரு வீரனை என்றும் கண்டதில்லை என்று அறிவுடையோர் போற்றும்படியாக திகழ்ந்த அண்ணலுக்கு ஸ்ரீராமர் செய்த மரியாதையே மார்பில் மூன்று குண்டுகளை ஏற்று அண்ணல் காந்தியடிகள் அடைந்த வீர மரணமாகும்.
ராம நாமம் ஜபிப்பவரை எவரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதே ராம நாமத்தின் மகிமை. அப்படியிருந்தும் எப்படி ஒருவனால் மகாத்மாவை சுட முடிந்தது என்பது எனக்கு வெகு நாட்களாக சந்தேகம் இருந்தது. அது ஸ்ரீராமரே தன் பக்தருக்கு செய்த மரியாதை என்பது பின்பு எனக்கு புரிந்தது.
மங்காமல் என்றும் ஒளிர்கவே மாவீரர் மகாத்மா காந்தியின் புகழ்!
மலை போல் என்றும் வளர்கவே குருமஹராஜ் ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ்!
சீரறாச் செல்வம் போல் சேர்கவே என் ஆசான் ஸ்ரீகிருஷ்ணருக்கே புகழ்!
அனைத்துலகையும் ஆள்கவே என் ஆதர்ஷ ஸ்ரீ ராமசந்திரர் புகழ்!!
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!!
1 comments:
பரசுராமர் சிரஞ்சீவி என்பது உணராமல் இவ்வளவு எழுதியுள்ளேன்....அய்யோ அய்யோ..
Post a Comment