கருணை விழி ஞான மொழி விளங்கும் முகம் கண்டேன்
கற்றதினால் தெளிவு பெற்ற பளிங்கு மனம் என்பேன்
படைக்கும் தொழில் அயன் மனதில் நிலைத்திருக்கும் தேவி
கல்வி எனும் வரம் அளிக்கும் கற்றவரின் ஆவி
இன்னுமொரு மலராக வீற்றிருப்பாள் வெண்தாமரை மீதேறி
தன் பக்தர்களை உயர்த்திடுவாள் நல்வார்த்தைகளை கூறி
அவளிடம் தான் இருக்கின்றது அறிவிற்கும் ஓர் எல்லை
அவ் எல்லையை கண்டவர்கள் இவ்வுலகெங்கும் இல்லை
கரம் இரண்டில் ஏந்திடுவாள் இசை அளிக்கும் வீணை
அவள் நாவினில் தான் வீற்றிருக்கும் வேதங்களின் ஆணை
அவள் தெள்ளறிவை பறைசாற்றும் வெண்பட்டு ஆடை
அவள் மார்பை அலங்கரிக்கும் வெண்முத்து மாலை
அவள் வீற்றிருக்கும் இடத்தினில் அன்ன பக்ஷிகளும் பாடும்
அவளிடம் நல் கலை பயின்று வண்ண மயில்களும் ஆடும்
அவள் அருளால் வெறும் சத்தங்கள் இன் இசையாக மாறும்
காய்ந்த விறகும் நல் வீணையாகி அவள் புகழை கூறும்
அறிந்து கொள்ளும் கலைக்கெல்லாம் அவள் இறுதிச் சிகரம்
அச்சிகரத்தை ஒத்திருக்கும் அவள் அணிந்திருக்கும் மகுடம்
கலைத் தேர்ச்சியெனும் கொம்புத் தேன் அவளால் தான் வாய்க்கும்
சிறு கல்லும் நல் விதையாகி பல அருங்கனிகள் காய்க்கும்
அவள் விழிகள் நமை பார்த்தால் அஞ்ஞானம் கரையும்
தீச்சுடர் வந்த அறையாக மனம் அறிவாலே நிறையும்
கேட்டிடவும் கற்றிடவும் அவள் கொடுத்திடுவாள் சக்தி
கலை நுணுக்கங்களில் தேர்ச்சி பெற காட்டிடுவாள் யுக்தி
பணிந்தவர்க்கு நல்லறிவளிப்பாள் சின் முத்திரையை காட்டி
பல விளக்கங்களும் அளித்திடுவாள் தன் தலையை ஆட்டி
வார்த்தைக்கு தந்திடுவாள் அர்த்தமெனும் சத்து
புவி விளங்கும் கலைகளுக்கு அவள் தானே வித்து
அவளை உடலினில் கொண்டவர்கள் திரு நடனத்தில் சிறப்பர்
அவளை நாவினில் கொண்டவர்கள் பெருங்கவிகளாய் இருப்பர்
அவளை கைகளில் கொண்டவர்கள் சிற்பத்தில் மிளிர்வர்
அவளை விரல்களில் கொண்டவர்கள் ஓவியத்தில் ஒளிர்வர்
அவளை காதுகளில் கொண்டவர்கள் இசைக்கலையில் சிங்கம்
அவளை நாசிகளில் கொண்டவர்கள் நளபாகத்தில் தங்கம்
அவளை புத்தியில் கொண்டவர்கள் கல்வியிலே மேதை
அவள் பாதம் பணிந்திட்டால் அவள் காட்டிடுவாள் பாதை
நீர் நிலைகளின் அருகில் தான் அவள் வீற்றிருக்கும் பீடம்
இசைக் கச்சேரி நடத்திட அங்கு குயில்களும் கூடும்
அவ் இன்னிசையை கேட்டு மரங்களும் தலை ஆட்டும்
கலை விசிறிகளாய் விசிறிகளாய் உற்சாகம் ஊட்டும்
தேன் குரலெடுத்து பைந்தமிழில் பாடிடுவாள் பாட்டு
கருங்கல்லும் உருகிடும் அவள் வீணை இசை கேட்டு
அவள் பாட்டுக்கு இசை சேர்க்க வான் மழையும் பெய்யும்
அம்மழையாலே மண் குளிர்ந்து செழிப்பு நிலை எய்யும்
தேவீ உன் பாதத்தில் தாழ்த்துகிறேன் சிரம்
கலைகளில் நான் சிறந்திட அளித்திடுவாய் வரம்
தேவீ உன்னை வணங்குகிறேன் இரு கரங்கள் கூட்டி
அனைத்தும் எனை அறியவைப்பாய் பெரும் கருணை காட்டி
வாணி எனும் நாமம் கொண்ட தேவியே போற்றி
தேவீ நீ தந்தருளும் நல்லறிவும் போற்றி
உன் பூவிரல்கள் இசை மீட்டும் வீணையும் போற்றி
கொலுசுகள் அலங்கரிக்கும் உன் பாதங்கள் போற்றி
கலைமகளே நீ காக்கும் கலைகளும் போற்றி
இனியவளே உன் அருள்பெற்ற கலைஞர்களும் போற்றி
சிறந்தவளே நீ வாழும் நாக்களும் போற்றி
அங்கிருந்து நீ படைக்கும் பாக்களும் போற்றி
இவ்வுலகின் அறிவெல்லாம் நான் அறிய வேண்டும்
விஞ்ஞான நுட்பங்கள் நான் புரிய வேண்டும்
நான் சொல்லும் வார்த்தையெல்லாம் சரியாக வேண்டும்
நான் நல்ல அறிஞனென்று இவ்வுலகறிய வேண்டும்
தேவீ உன் அருள் கேட்டேன் குறையாமல் தருவாய்
என் நாவில் வீற்றிருக்க மறுக்காமல் வருவாய்
ஹயக்ரீவர் மாணவியே போற்றுகிறேன் உன்னை
நல் அறிஞனாய் கலைஞனாய் ஆக்கிடுவாய் என்னை
சரஸ்வதியே போற்றி சாரதையே போற்றி
வித்யையே போற்றி வீணாம்பிகையே போற்றி
கலைமகளே போற்றி காதாம்பரியே போற்றி
வாக்கீஸ்வரியே போற்றி வரமளிப்பவளே போற்றி
அன்பானவளே போற்றி அழகானவளே போற்றி
அறிவானவளே போற்றி தெளிவானவளே போற்றி
என்றென்றும் போற்றி எப்போதும் போற்றி
உன் நாமம் போற்றி உன் பாதம் போற்றி
0 comments:
Post a Comment