அயக்ரீவ தேவனே அயக்ரீவ தேவனே
அடியேனின் கனவதனில் தோன்றிய நற்தேவனே
அறிவளிக்கும் தேவனே மடமழிக்கும் தேவனே
அறிவதனை ஞாயிறாக ஒளிரவைக்கும் தேவனே
ஒட்டிய நல்வயிறுமாய் அகன்ற நல்மார்புமாய்
திரண்ட நற்தோள்களும் வலுத்த நாற்கரங்களும்
மார்பின்மேல் கௌத்துபம் மார்பினுள் திருமகள்
அணிசெய்யும் தேவனே அழகிய நற்தேவனே
இடக்கை பாஞ்சசன்னியம் வலக்கையில் சக்கரம்
வலக்கை சின்முத்திரை இடக்கையில் நான்மறை
வலக்கையில் இடக்கையில் கங்கணங்கள் காப்புகள்
அணிசெய்யும் தேவனே அறிவளிக்கும் தேவனே
வெண்பட்டு ஆடையும் வெண்முத்து மாலையும்
இடையிலும் மார்பிலும் அணிசெய்யும் தேவனே
குதிரைத்தலை குதிரைமுகம் குதிரைகாது குதிரைகண்
குதிரைநெற்றி குதிரைமூக்கு குதிரைவாய் கொண்டவா
நெற்றியதில் திருநாமம் வெண்மையும் சிவப்புமாய்
தலையதனில் பொன்மகுடம் துளக்கமாய் துளக்கமாய்
அதற்குமேல் ஆதிசேடன் ஐந்துநற் தலையனாய்
இடப்பக்கம் திருவுடன் விளங்கும் ஆதிதேவனே
வெளியதனுள் பேருயிர் ஆகிநிற்கும் தேவனே
அண்டத்துள் வெளியதாகி வளர்ந்துசெல்லும் தேவனே
உயிர்களில் அறிவாகி பல்கிநிற்கும் தேவனே
அறிவதனை படிகமாக தெளியவைக்கும் தேவனே
நாபியதில் நான்முகனை பெற்றவா பெற்றவா
நாமகளுக்கு குருவாகி உற்றவா உற்றவா
நினைவாற்றல் புத்திக்கூர்மை அளிப்பவா அளிப்பவா
அஞ்ஞானம் அகலும்படி ஜொளிப்பவா ஜொளிப்பவா
நான்மறை கவர்ந்தொழிந்த கயவனை ஒழித்தவா
நான்மறை மீட்டுமீண்டும் நாமுகர்க் களித்தவா
நான்மறை நன்குகற்றும் எட்டிடாத ஞானத்தை
அளிக்கவல்ல பாதனே அயக்ரீவ தேவனே
ஆதியிலே மீனமாகி வேதநான்கும் மீட்டவா
அதன்பின்னே கூர்மமாகி மலைமுதுகில் சுமந்தவா
கேழலாகி நீரில்மூழ்கி பூமியை எடுத்தவா
பாம்பதனை பாயதாக்கி பாம்பின்மேல் படுத்தவா
சிம்மமாகி சீறிச்சென்று பொன்னனைக் கிழித்தவா
கோபம்கொண்டு கோடறியால் வீரரை ஒழித்தவா
குறளனாகி மனங்கவர்ந்து மாவலியை இரந்தவா
மனங்கவர்ந்த தோடுமன்றி முற்றும்பின் கவர்ந்தவா
தயரதனின் பிள்ளையாகி தசமுகனை செற்றவா
சிவவில்லை செற்றுபின் சீதைக்கை பிடித்தவா
மன்னனாகி மக்களை தாய்போலக் காத்தவா
ராமனாகவும் பிறந்த அயக்ரீவ தேவனே
தேவகியின் பிள்ளையாகி சிறைக்கதவை தாண்டினாய்
யசோதையின் பிள்ளையாகி வெண்ணைத்தின்ன வேண்டினாய்
மண்ணைத்தின்று வாய்பிளந்து அண்டமண்டம் காட்டினாய்
கண்ணனாகவும் பிறந்த அயக்ரீவ தேவனே
வனமாலை தண்மார்பில் அணிந்தவா அணிந்தவா
வாதிராசர் தேசிகர் பணிந்தவா பணிந்தவா
அன்னமாகி வேதநான்கும் பகர்ந்தவா பகர்ந்தவா
அண்டத்துள் வெளியாகி வளர்ந்தவா வளர்ந்தவா
இடைவெளிநீ இடமும்நீ இதயமுறை தேவனே
அறிவும்நீ தெளிவும்நீ வெளியும்நீ இறைவனே
ஆகாயம் காண்கையில் உனைக்கண்டேன் பாசனே
வானமெங்கும் உன்நீலம் படர்ந்ததுவே நேசனே
அன்பர்க்கு அன்பனே அறிஞர்க்கு அறிஞனே
அன்பரை அறிஞராக ஆக்கவல்ல தேவனே
எண்ணி நாலுவேதமும் எண்ணிலாத கலைகளும்
எண்ணத்தில் நின்றருளும் எட்டெழுத்து தேவனே
சுரமேழும் சுருதியுமென் கைப்பாவை ஆக்குவாய்
என்னுடலை என்னுடலை நடனமாட பண்ணுவாய்
நல்நடிகனென்று நாற்திசையும் எனைப்புகழ பண்ணுவாய்
சகலகலா வல்லனென்ற நற்பெயரை நல்குவாய்
புகழ்மீது பற்றிலேன் புகழ்க்கெல்லாம் உரியவா
நான்மறை நன்குகற்றும் காண்பதற்கு அரியவா
பக்தியதை தரணியெங்கும் பரப்பிட பரப்பிட
கலைத்தேர்ச்சி அன்றிவேறு வழிகாணேன் பரிமுகா
அயக்ரீவா அயகண்டா அயகர்ணா அயமுகா
அயவதனா அயவதனா ஒளிவதனா மதிமுகா
பரிமுகத்தா பரிகழுத்தா சதுர்கரத்தா பரிமுகா
பரிகர்ணா பரிகாதா பரிவாயா பரிமுகா
0 comments:
Post a Comment