பாதம் என்ன பாதம் இது சரஸ்வதியின் பாதம்
கலையதனின் ஊற்றாக விளங்குகின்ற பாதம்
கலைதேர்ச்சியதை வரமாக வழங்குகின்ற பாதம்
கவிஞர்களின் நாவதனில் நிலைபெற்ற பாதம்
நான்முகனார் துணையவளின் தூய்மையான பாதம்
குதிரைமுக பெருமானின் மாணவியின் பாதம்
குதூகலமாய் கலைகளை பயில வைக்கும் பாதம்
பாடகர்கள் குரலினை இனிமையாக்கும் பாதம்
வெள்ளையாடை தரித்தவளின் வண்ணவண்ண பாதம்
படைப்புகளை சரளமாக நிகழவைக்கும் பாதம்
படைக்கப் பல விடயங்களை கொடுக்க வல்ல பாதம்
இசைக் கலைஞர்களின் காதுகளில் விளங்குகின்ற பாதம்
வீணையதை இசைப்பவளின் வீரிய நற்பாதம்
பரிமுகரின் பாடங்களில் தேரியவள் பாதம்
வேதங்களின் கரையதனை கண்டவளின் பாதம்
வேதியரும் வேதம் சொல்ல உதவுகின்ற பாதம்
வெண்முத்து மாலைகள் அணிபவளின் பாதம்
ரசனையதை வழங்குகின்ற ரம்மிய நற்பாதம்
மனமதனை ஒருமுகமாய் இயங்கவைக்கும் பாதம்
மாணவர்கள் புத்தியை கூர்மையாக்கும் பாதம்
நேர்கொண்ட பார்வையதை கொண்டவளின் பாதம்
வார்த்தை வளம் வரமாக வழங்குபவள் பாதம்
நினைக்க நினைக்க நுட்பங்களை புரிய வைக்கும் பாதம்
நடனக் கலைஞர்களின் உடலதனில் வாழுகின்ற பாதம்
நிமிர்ந்த நன்னடையதனை உடையவளின் பாதம்
பயிற்சியதில் தேர்ச்சியதை அளிப்பவளின் பாதம்
அறிவதனை அன்புடனே அளிப்பவளின் பாதம்
ஆசான்கள் உருவெடுத்து வருபவளின் பாதம்
வெள்ளிக் கொலுசுகளை விருப்பமுடன் அணிபவளின் பாதம்
சலசல சதங்கைகள் அணிந்து நடமாடுகின்ற பாதம்
கலையதனை விரும்புவோரை நாடிச் செல்லும் பாதம்
கலைஞர்கள் அனைவருக்கும் கண்ணனைய பாதம்
0 comments:
Post a Comment