சூரியனே சூரியனே ஆயிரம் கைக்கொண்டவா
ஒளிரவா ஒளிரவா என்னுள் நீயும் ஒளிரவா
போற்றினேன் போற்றினேன் உன் பாதம் போற்றினேன்
நாரணரின் அம்சமே உன் பாதம் போற்றினேன்
மஞ்சள் நிறம் கொண்டவா மங்களங்கள் அருளுவாய்
பொன்னொளி மேனியனே எனைமிளிர பண்ணுவாய்
அதிகாலை தினம்கிழக்கில் உதிப்பவா உதிப்பவா
உயிர்களுக்கு நல்வாழ்வை அளிப்பவா அளிப்பவா
ஆதியிலே நாரணரும் மீனாக மாறினார்
நெடுநேரம் நீரினுள்ளே யுத்தம் யுத்தம் பண்ணினார்
வெற்றிகொண்டு வெளியில்வந்து குளிரிலவர் நடுங்கிட
கதிர்களை பாய்ச்சி பாய்ச்சி அவர்குளிரை போக்கினாய்
தாவரங்கள் உணவுசெய்ய வெப்பமது அளிப்பவா
மாபெரும் தீபமாகி தரணியெங்கும் ஜொளிப்பவா
கடல்நீரை மேலெழுப்பி மழையாக தருபவா
காற்றதனை தென்றலாக்கி தருபவா தருபவா
பிரம்மத்திடம் கீதையை ஆதியிலே கேட்டவா
இஷ்வாகு மன்னனுக்கு அதையன்பாய் தந்தவா
மனுதர்மம் இயற்றிய மனுவுமுன் அம்சமே
அவன்வழியில் வந்தமன்னர் அனைவருமுன் அம்சமே
அம்பரீச மன்னனும் உன்வழியில் வந்தவன்
நாரணரின் சுதர்சனம் அவனைக் காத்து நின்றது
துர்வாசர் அவனிடம் வம்புசெய்ய வந்திட
துர்வாசரை சுதர்சனம் துரத்திக் கொண்டு சென்றது
வாய்மையனாய் பெயர்பெற்ற அரிச்சந்திர மன்னனும்
கங்கையை நிலம்சேர்த்த பகீரத மாமன்னனும்
இந்திரந்தன் இடியதால் வீழ்ந்திடாத ரகுவும்
பாவம்போக்கும் பாதமுடை ராமருமுன் வம்சமே
ராமபிரான் லங்கையை சூழ்ந்துகொண்டு தாக்கினார்
ராவணனின் தலைகளை ஒவ்வொன்றாய் போக்கினார்
வீழ்த்தவீழ்த்த அவன்தலைகள் முளைத்தன முளைத்தன
ராமருன்புகழ் ஓதிதாக்க வீழ்ந்துபோனான் ராவணன்
அரிச்சந்திரன் கதையதனால் தெளிவுபெற்றார் காந்தியே
வெள்ளையனை விரட்டிவிட்ட வெள்ளையுள்ள காந்தியே
ராமநாமம் தினமோதி ஞானம்பெற்றார் காந்தியே
வெள்ளையனை விரட்டிவிட்ட வெள்ளையுள்ள காந்தியே
சகரனின் பிள்ளைகள் பூமியதை தோண்டினர்
அச்செயலால் பூமியது கடலேழும் பெற்றது
கடல்களும் சாகரங்கள் எனும்பெயரை பெற்றன
உயிர்களும் கடல்களால் நல்லநீரைப் பெற்றன
சகரனின் பிள்ளைகள்போல் மகத்தான செயல்களை
உன்வழியில் வந்தவர்கள் எப்பொழுதும் செய்தனர்
வாரிதரும் வள்ளலாக வாழ்ந்துசென்ற கர்ணனும்
உன்பிள்ளை உன்குணத்தன் வாரிதரும் வள்ளலே
சூரியனே சீரியனே வீரியனே அருளுவாய்
கதிரவனே பகலவனே புலரவனே அருளுவாய்
உயிர்களை ஊக்குவிக்கும் ஆயிரம் கரத்தவா
பொன்மகுடம் பொன்மகுடம் அலங்கரிக்கும் சிரத்தவா
0 comments:
Post a Comment