நீலநிற நாயகன் நீடுபுகழ் நாயகன்
நீலமாக நீளுகின்ற வானம்போன்ற நாயகன்
எங்கும் எங்கும் இருப்பதில் அவரும் ஒரு வானமே
அவரை எண்ண ஆனந்தம் தொடுவது அவ்வானமே
நீலமாக இருப்பதில் அவர் தேகம் வானமே
பரந்தபடி இருப்பதில் அவர் உள்ளம் வானமே
வள்ளலாக தருவதில் அவரிதயம் வானமே
வானளாவ உயர்ந்து நிற்கும் அவர்புகழும் வானமே
தீமையதை கண்டுவிட்டால் இடிபோல தாக்குவார்
அவரடியில் பணிந்துவிட்டால் மேகமென அருளுவார்
அவர்குணத்தை தந்துதந்து நன்மையராய் மாற்றுவார்
தீமையதை நம்முள்ளே தங்காமல் ஓட்டுவார்
வறண்டநிலம் வளமாக்கும் வானம்போன்ற ராமரே
காய்ந்தமரம் பசுமையாக்கும் வானம் போன்ற ராமரே
வறண்டுபோன வாழ்க்கைக்கு மழையாகும் அவரருள்
காய்ந்துபோன மரத்தையும் காய்க்கவைக்கும் அவரருள்
வானம்பார்த்த பூமிபோல மனிதர்களின் வாழ்க்கையும்
இறையைப் பார்த்து கிடப்பதை உணருவீர் உணருவீர்
இறைவரில் சரண்புக உகந்த தெய்வம் ராமரே
அண்டியோரை கைவிடாத ராஜ ராஜராஜராமரே
வானிலுள்ள விண்மீன்கள் லட்சம்லட்சம் லட்சம்போல்
ராமரிடம் நன்மையும் லட்சம் லட்சம் லட்சமே
வானிலுள்ள விண்மீன்கள் லட்சம்லட்சம் லட்சம்போல்
ராமரிடம் பெற்ற நன்மை லட்சம் லட்சம் லட்சமே
வானம்நோக்கி உமிழலாம் புழுதிவாறி இறைக்கலாம்
அத்தனையும் வந்துவீழும் எறிந்தவர் முகத்திலே
ராமர்செயல் குற்றமென்று கொக்கரித்து மகிழுவோர்
நோய்கண்டு துன்பமுற்று சென்றுசாய்வர் நரகிலே
பூனையது கண்ணைமூடி வானமில்லை என்றக்கால்
வானமது வானமது இல்லையென்று ஆகுமோ
நாத்திகரும் புத்திகெட்டு ராமரில்லை என்றக்கால்
ராமபிரான் இல்லையென்று ஆகுமோ ஆகுமோ??
இடியதுவும் இடிக்கலாம் மின்னலதும் வெட்டலாம்
இடியதுவும் மின்னலதும் வானத்தை உடைக்குமோ
ராமபிரான் எதிரிகள் நூறுநூறு நூற்றுவர்
ராமரைத் தாக்கியும் அவரைவெல்ல முடிந்ததோ?
வானமதை மேகமது சிலகாலம் மூடலாம்
மேகமது கலையுமே வானமென்றும் இருக்குமே
ராமபுகழ் மறுப்பவர் வந்துசெல்வர் மண்ணிலே
ராமபக்தர் பாட்டெல்லாம் என்றுமென்றும் உலவுமே
வெயிலதுவும் அடிக்கலாம் வானமதும் வாடுதோ
மழையதுவும் பெய்யலாம் வானமதும் நனையுதோ
ராமர் மண்ணில் வாழ்ந்தபோது இன்பதுன்பம் அப்படி
நாத்திகரின் வார்த்தைக்கெதிர் ராமபுகழ் அப்படி
நீலநிற வானமே நீலநிற வானமே
நீண்டுநீண்டு நீண்டுசெல்லும் நீலநிற வானமே
நீலவண்ண ராமரே நீலவண்ண ராமரே
நீடுநீடு நீடுபுகழ் நீலவண்ண ராமரே
0 comments:
Post a Comment