மன்னவன் எனக்கு மகனாய் பிறந்த மலர்விழி கண்ணா ஸ்ரீ ராமா
மனையவள் கோசலை மடியில் சுமந்த மறவர் மாண்பே ஸ்ரீ ராமா
அன்பென்ற வார்த்தைக்கு அர்த்தமாய் வந்த அருமை புதல்வன் நீயல்லவா
பல்லாயிரம் ஆண்டுகள் தாகத்தை தீர்த்த அமுதம் கலந்த நீரல்லவா
கற்கண்டு கலந்த தேனாய் இனிக்கும் ராமா உனது பேரல்லவா
கயவன் என்னால் கானகம் சென்றாய் நான் வெட்டப்பட்ட வேரல்லவா!
அப்பா என நீ முதன்முதல் அழைத்த அந்த நாளை மறப்பேனா?
அப்படி மீண்டும் அழைப்பதை கேட்கும் பாக்கியம் இன்றி இறப்பேனா?
விதியின் பிடியில் சிக்காதிருந்தால் என் விழியே உனை நான் துறப்பேனா?
விழியின் கருமணி விதிவழி ஏற்று கானகம் செல்வதை பொறுப்பேனா?
மக்களை காத்த மன்னவன் எனக்கு மகனை காக்க வக்கில்லை
வாழ விரும்பா வறியவன் எனக்கினி வானகம் அன்றி திக்கில்லை
தர்மம் அறிந்த தலைமகனே உன் செயலில் ஏதும் தப்பில்லை
குற்றம் இல்லா குணமகனே உனக்கு வானவர் கூட ஒப்பில்லை
என்சொல் காக்க கானகம் சென்று அழியாப் புகழை எய்திட்டாய்
என்றும் உனது செயலால் என்னை கடனுடை மனிதனாய் செய்திட்டாய்
பிள்ளைக்குத் தானே பெற்றவனிடம் உலக வழக்கில் கடன்பாடு
வழக்கத்தை மாற்றி எனை ஏழையாய் செய்வதில் உனக்கும் உண்டோ உடன்பாடு?
நீ பிறந்த நாளில் தந்தையாய் ஆனதில் மகிழ்ந்த கடனை அடைப்பேனா?
நல்லவன் நீயென நால்வர் சொல்கையில் நெகிழ்ந்த கடனை அடைப்பேனா?
மலர்ந்த முகத்துடன் துறவறம் ஏற்றதில் மிகுந்த கடனை அடைப்பேனா?
உலகின் அனைத்து செல்வத்தாலும் உனக்கு உகந்த கடனை அடைப்பேனா?
முடியொன்று இழந்த மானும் கூட அதன்பின் நிச்சயம் வாழாது
மூத்தவனே உனைப் பிரிந்த பின்னும் இன்னும் வாழ்கிறேன் சாகாது
உன்னோடு வாழ்ந்த பழகிய என்னால் இனி நீ இல்லாமல் இருக்க முடியாது
உனக்காய் அறுபதாயிரம் ஆண்டுகள் பொறுத்த எனக்கினி அரை நொடி பொறுக்க இயலாது
0 comments:
Post a Comment