அஞ்சனை வயிற்றில் தோன்றிய முத்தே
அகில உலகுக்கும் பக்திக்கு வித்தே
ஸ்ரீராமர் புகழ் உணர்ந்த ஞானி நீயே
என் ராம பக்தி வளர ஏணி நீயே
மலைகளை தூக்கும் ஆற்றல் இருந்தும்
விண்ணை அளக்கும் உருவம் இருந்தும்
ஸ்ரீராமர் முன்னால் நீ குறுகி நிற்கிறாய்
ஸ்ரீராமரின் அன்பால் நீ உருகி நிற்கிறாய்
சொல்லிலும் செயலிலும் உனக்கிணை உண்டோ
ஆகாயத்தை விடவும் அகன்றது உண்டோ
உன் புகழ் யாவும் ஸ்ரீராமர் புகழ் அன்றோ
மரத்தின் புகழ் அதன் வேருக்கு அன்றோ
அன்பர்க்கு அன்பன் அடியோர்க்கு அடியன்
பளிங்கு மனத்தில் துளி மாசற்ற எளியன்
நினைத்தாலே தித்திக்கும் திகட்டாத இனியன்
கருணை மணம்பரப்பும் செந்தாமரை விழியன்
ஸ்ரீராமரெனும் பெயர் கொண்ட ஆனந்த ஊற்று
அத்தங்கக் தலைவருக்கு இங்குண்டோ மாற்று
நம் தலைவர் புகழை இவ்வுலகெங்கும் பரப்பிட
அவர் பண்பின் சிறப்புகளை மக்கள் மனதில் நிரப்பிட
எனையும் உனைப்போல் நல்பக்தனாய் மாற்றிடு
ராமபக்தியெனும் நல்லமுதை என் இதயத்தில் ஊற்றிடு
அஞ்ஞானங்கள் அகற்றி எனை ஞானியாய் தேற்றிடு
ராமர் புகழ் பரப்புவதில் உன் இளையவனாய் ஏற்றிடு
அடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்
இன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்
இவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்
இன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்
ஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்
வெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்
ஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்
உன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
அன்பர்கள் அனைவருக்கும் அனுமந்த் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
4 comments:
அருமை, அருமை. ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதிய முத்தாக ஜொலிக்கிறது.
ஸ்ரீராம ஜெயம்.
நன்றி கவிநயா!
ஸ்ரீராமஜெயம்
உள்ளத்தில் இருத்திய
தெய்வத்தினை
உலகிலுள்ளோரும்
உத்தம புருஷரும்
உணர்ந்ததோடு, உமது
உயர் குணத்தினை
உலகிலுள்ளோருக்கு
உணர்த்தி உயரிய
இடமளித்த
இறைவனின் திரு
உளத்தின் புகழ்பாட
வரிகளில்லையே!
உன் பெருமைபாடும்
உயருள்ளம் கொண்டோரை
எண்ணி உள்ளம்
உருகுதையா?
அட்சயா... தங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊட்டம். தங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
Post a Comment